ராஜபாளையம் அருகே பாலிதீன் நிறுவனத்தில் தீ விபத்து.. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகின
ராஜபாளையம் அருகே பாலிதீன் தயாரிப்பு நிறுவனத்தில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பாலிதீன் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகின.
ராஜபாளையம் அருகே உள்ளது ஆசிலாபுரம். இங்கு பாலிதீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அதனால் பாலிதீன் பைகள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பாலிதீன் பைகள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது அருகிலிருந்த குடோனுக்கும் பரவியது. மளமளவென எரிந்த இநத் தீயில் இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. அவை பல கோடி ரூபாய் மதிப்பிலான பாலிதீன் பைகள் என கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைவாக வந்து செயல்பட்டனர். ஆனாலும் இவ்வளவு நேரம் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
தற்போதுவரை அது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாத நிலையில், காலையிலேயே தீ விபத்து நடைபெற்றுவிட்டதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.