கும்பகோணம் சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து.. ஆடி தள்ளுபடிக்காக குவிந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம்
கும்பகோணம்: ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெற்று வந்த சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்தது. கும்பகோணத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்குவதற்காக அங்கு குவிந்திருந்தனர்.

இரவு 7 மணி அளவில் சென்னை சில்க்ஸ் கடையின் முகப்பு பகுதியிலிருந்து புகை எழும்பியது. இதனையறிந்த சாலையில் நின்றவர்கள், நிறுவன ஊழியரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினர்.
மேலும், எதிர்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழகம், தனியார் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்களும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து பற்றி தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அந்த இடத்திற்கு வந்தனர்.

பின்னர், கும்பகோணம், திருவிடைமருதூர் தீயணைப்பு துறையை சேர்ந்த 3க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து, தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது என தெரிவித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications