82 மீனவர்கள் கைது.. கச்சத்தீவு விழா புறக்கணிப்பு.. இலங்கை அட்டூழியத்தால் மீனவர்கள் சங்கம் முடிவு
தமிழகத்தைச் சேர்ந்த 82 மீனவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். இதனால் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து வரும் இலங்கையைக் கண்டிக்கும் வகையில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 53 மீனவர்கள் சிறையில் உள்ளனர். 120க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்களையும் அவர்களது 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்த ஒருவார காலத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 50 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தோணியார் விழா
கச்சத்தீவு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயமும் அங்கு நடைபெறும் திருவிழாவும் மிகவும் புகழ் பெற்றது.
எப்போது திருவிழா ?
இந்தியா மற்றும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் சேர்ந்து கொண்டாடப்படும் புனித அந்தோணியார் திருவிழா இம்மாதம் 11ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நெடுந்தீவு பங்குதந்தை மூலம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் புறக்கணிப்பு
தற்போது தமிழக மீனவர்கள் 82 பேரும் அவர்களுக்கு சொந்தமான 125 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்ல மாட்டோம் என்று அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்
கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவின் போது, சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவித்தால்தான் விழாவில் கலந்து கொள்வோம் என்று மீனவர்கள் கூறினார்கள். அப்போது, மாவட்ட நிர்வாகம் திருவிழாவிற்கு சென்று திரும்பிய 10 நாட்களில் படகுகள் மீட்கப்படும் என்று நம்பிக்கை அளித்தது. இதனை நம்பி மீனவர்கள் விழாவிற்கு சென்றார்கள். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட 128 படகுகளையும் இலங்கை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனை மீட்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் மீனவர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.