வெள்ள நிவாரணங்கள் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக அரசு வழங்கும் மழை வெள்ள நிவாரண பொருட்கள் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், பல்லாவரம், மப்பேடு, அகரம்தென், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளமான இடங்களில் மழைநீர் ரோடுகளில் 3 அடிக்கு மேல் பயங்கரமாக பெருக்கெடுத்து ஓடியது.

தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் பெய்த கனமழைக்கு சிட்கோ நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வாகனங்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து வெள்ளம் பாதித்த சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. இந்த குழு வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும். இந்த ஆய்வுப் பணி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முறையாக நடைபெறவில்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications