வெள்ள நிவாரண நிதி வழங்க கணக்கெடுப்பு... 3,000 ஊழியர்கள் வீடு வீடாக செல்கிறார்கள்
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக, பாதிக்கப்பட்டோரைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதன்படி, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கண்டறிந்து உதவிகள் வழங்குவதற்கு வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சேத தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மைதிலி ராஜேந்திரன் கண்காணிப்பில்
தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்காணிப்பில் இந்த வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

கலந்தாய்வுக் கூட்டம்
களத்தில் இறங்கி வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நேற்று முதல் கணக்கெடுப்பு
அதனைத் தொடர்ந்து, நேற்று முதல் சென்னை முழுவதும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மொத்தம் 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதற்கென 85 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 10 வட்டங்களில்
இந்த அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சென்னையில் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரேஷன் கார்டு அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம்
இவ்வாறு கணக்கெடுக்கும் குழுவினர் வரும்போது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் அவை சேதமடைந்திருந்தாலோ அல்லது அடித்துச் செல்லப்பட்டிருந்தாலோ அது
தொடர்பான தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது.

கணக்கு இல்லாவிட்டால் புதுக் கணக்கு
இதேபோல், இதுவரை வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு தனியாக சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மறு கணக்கீடு
இந்தக் கணக்கெடுப்பு பணியின் போது வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை ‘மறு கணக்கீடு' என்று குறிப்பிடுவார்கள். பின்னர், குறிப்பிட்ட அந்த வீடுகளுக்கு மீண்டும் சென்று விவரங்களைச் சேகரிப்பார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிக்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் கேட்கும் தகவல்கள்:
வார்டு, பகுதி, தெரு பெயர்
குடும்ப தலைவர், குடும்ப தலைவி பெயர்
முகவரி
குடும்ப அட்டை எண்
வங்கி கணக்கு எண் இருந்தால், வங்கி பெயர், கிளை பெயர், கணக்கு எண்
குடிசை வீடா அல்லது கட்டிட வீடா?
குடிசை வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?
கட்டிட வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?
இடிபாடுகள் இல்லையென்றால், பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?
குடும்ப அட்டை எண் இல்லை என்றால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை எண் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தால், குடும்ப அட்டை வைத்து எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களோ? அந்த கடை பெயரையும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி பெயர் மற்றும் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications