ஆடி காற்று ஆவேசம்… உதிரும் பூக்கள்… விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
நெல்லை: ஆடி காற்றுக்கு அம்மியே பறக்கும் என்பார்கள்... அந்த அளவிற்கு ஆவேசமாக வீசும். நெல்லை மாவட்டத்தில் ஆடிக்காற்று பலமாக வீசுவதால் மல்லிகை பூக்கள் உதிர்ந்து வீணாகி வருகின்றன. அதோடு விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போது ஆடி காற்று பலமாக வீசி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மல்லிகை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மானூர், வல்லவன்கோட்டை, சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகள், கண்டங்குறிச்சி, கங்கைகொண்டான் அருகே ராஜபதி சுற்று வட்டார கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிராமங்கள் என பல இடங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் மல்லிகை விளைசசல் களை கட்டியுள்ள நிலையில் பலமாக வீசும் ஆடிக்காற்றால் செடிகளில் இருந்து மொட்டுகள் உதிர்கின்றன. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இந்நிலையில் பூ விளையும் கிலோ ரூ.100 ஆக சரிந்துள்ளது. இதுகுறித்து பூ விற்பனையாளர்கள் கூறுகையில், ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பது இல்லை. இதனால் பூக்கள் விற்பனை பொதுமாக சுமாராக இருக்கும்.

தற்போது பிச்சிப் பூ கிலோ ரூ.130க்கும், மல்லிகை கிலோ ரூ.100க்கும் விற்பனையாகிறது. காற்று காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ள நிலையில் பிச்சிபூ வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மல்லிகைக்கு கிராக்கி இல்லை. பிற பூக்களின் விலையும் சராசரியாகவே உள்ளது. இதனால விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பலர் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications