சென்னையில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கடையில் 20 போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள கிருஷ்ணா ஸ்டோரில் இருந்து போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டேல் நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுவன் பரத். இவனும், இவனது நண்பர்கள் இருவரும் அருகில் இருக்கும் கடை ஒன்றில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இவர்களில் பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த மாணவனை நேற்று சுகாதார நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர். தண்டையார்பேட்டை பகுதி முதல்வர் ஜெயலலிதாவின் ஆ.கே. நகர் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் பரபரப்பு அதிகமானது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் புகாரையடுத்து ஆர்கே நகர் காவல்துறையினர் போதை சாக்லேட் விற்ற கடையில் இருந்த சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு பூட்டு போட்டனர். இந்தக் கடையை நடத்தி வந்த சுரேஷ் பகதூர் என்பவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தண்டையார் பேட்டை கடைகளில் இன்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் பள்ளியை சுற்றியுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சாக்லேட்டில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பது குறித்து இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை சார்ந்த, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறையும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இன்று நடைபெற்ற சோதனையில் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள கிருஷ்ணா ஸ்டோரில் இருந்து போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.