வியாபாரமான கல்வி, கிட்னியை விற்று படிக்க வைக்கும் தமிழக பெற்றோர்: திடுக் தகவல்
சென்னை: தனது மகனின் உயர் கல்விக்காக 37 வயது தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார்.
உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம். இந்நிலையில் பெண் ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவர்களுக்கு கடந்த 25ம் தேதி இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த இமெயிலில் அவர் கூறியிருப்பதாவது,
என் சிறுநீரகத்தை விற்பனை செய்ய விரும்புகிறேன். எனக்கு 37 வயது ஆகிறது. திருமணமானவள் நான். என் மகனின் மேல்படிப்புக்கு என்னிடம் பணம் இல்லை. குடும்பத்தில் பிரச்சனையாக உள்ளது. சார், எனக்கு உதவி செய்ய முடியுமா?...என் ரத்தம் பி பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கும்போது பல பெற்றோர்கள் இது போன்று சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மோகன் பவன்டேஷன் என்ற என்.ஜி.ஓ.வின் தலைவர் டாக்டர் சுனில் ஷ்ராப் கூறுகையில்,
உயர் கல்வி என்பது விலை உயர்ந்ததாகிவிட்டது. அதனால் பெற்றோர் அல்லாடுகிறார்கள். சிறுநீரகத்தை விற்பனை செய்ய நினைக்கும் பெற்றோர் படிக்காதவர்களோ, மிகவும் ஏழையோ கிடையாது. முன்பு எல்லாம் கடனை அடைக்க, மகளுக்கு திருமணம் செய்ய மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புரோக்கர் மூலம் சிறுநீரகத்தை விற்றனர் என்றார்.
கல்லூரியில் சேர்க்கை நடக்கையில் சிறுநீரகத்தை விற்கிறோம் என்று கூறி பல இமெயில்கள் வரும். கல்லூரி சேர்க்கை முடிந்த பிறகு இமெயில்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications