முன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பிலேயே இன்றைய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் டிஜிபி நட்ராஜ் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை அதிகாரி அலெக்சாண்டரும் அதிமுகவில் இணைந்தார். பின்னர்தான் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் இவர்களது கண்காணிப்பின் கீழ் வந்தனர்.
இதனடிப்படையில் அதிமுகவில் பல ஒழுங்கு நடவடிக்கைகளை ஜெயலலிதாவும் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போன நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் நட்ராஜின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதற்கேற்ப இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் போது நட்ராஜும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இனி நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு என்பது நட்ராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் முழு கண்காணிப்பிலேயே நடைபெறும் என்றே கூறப்படுகிறது.