தளபதி என்ற பட்டத்தைக் கொடுத்ததே அழகிரி அண்ணன்தான்... டிஸ்மிஸ் ஆன கவுஸ் பாட்சா!
மதுரை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற பட்டத்தைக் கொடுத்ததே மு.க.அழகிரிதான். அவரை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா கூறியுள்ளார்.
அழகிரி நீக்கத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மிசாபாண்டியன், இசக்கி முத்து, உதயகுமார், சிவகுமார், கோபிநாதன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட 10 பேர் திமுகவில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கவுஸ் பாட்சா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம்
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பல லட்சக்கணக்கானோர் கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்த்த இயக்கம் தி.மு.க.
அழகு பார்த்தவர் அழகிரி
சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு கட்சி பதவிகள், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர் போன்ற உயர் பதவிகளை தந்து அழகுபார்த்தவர் தலைவர் கலைஞர், அண்ணன் மு.க.அழகிரி.
நல்லெண்ணத்திற்காக நீக்கப்பட்டார்
இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். சில குறைபாடுகள், தடங்கல்கள் நீங்கி கட்சி வலிமையும், பொலிவும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சில கருத்துக்களை அண்ணன் அழகிரி சொன்னார். அதற்காக அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அழகிரி - ஸ்டாலின் இணைந்தால் நல்லது
அண்ணன் அழகிரி-ஸ்டாலின் ஆகியோர் இணைந்து கட்சியை வழிநடத்தினால்தான் நன்றாக இருக்கும் என்பதற்காக என்போன்ற தொண்டர்கள் அண்ணன் அழகிரி பக்கம் நின்று 2 பேரும் இணைந்து செயல்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பணியாற்றி வந்தோம்.
சுயநலவாதிகள்- துரோகிகள்
இந்த இயக்கம் வலுபெற்றுவிடக்கூடாது என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சில சுயநல வாதிகள், கட்சிக்கு துரோகம் இழைத்ததுடன் தலைமைக்கும் தவறான தகவல்களை கொடுத்து எங்களை திமுகவில் இருந்து நீக்கி உள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஷயம் என்போன்றோர்களுக்கு வருத்தத்தை தந்தாலும் எங்களை நீக்கியதன் மூலம் திமுககம் வலிமை பெரும் என்றால் மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
கட்டிக் காத்தவர் அழகிரிதான்
தென்மாவட்டத்தில் திமுகவை கட்டிக்காத்து கட்சி தொண்டர்களை அரவணைத்து பல்வேறு தேர்தல்களில் வெற்றிக்கனிகளை பெற்றுத்தந்தவர் அண்ணன் அழகிரி.
பட்டம் கொடுத்தவரே அழகிரிதானே
மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற பட்டத்தை கொடுத்த வரும் அவர்தான். அப்பேற்பட்ட அவரையும், அவருடன் துணை நின்ற எங்களையும் இயக்கத்தில் இருந்து இன்றைக்கு நீக்கி இருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞர், கழக தோழர்களின் இதயங்களில் இருந்து எங்களை நீக்க முடியாது. எனது 7 தலைமுறையும் கலைஞருக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றிகடன் பட்டவர்களாக இருப்போம்.
மீண்டும் அழகிரியை சேர்க்க வேண்டும்
மீண்டும் அண்ணன் அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டுவதுடன் எனது இறுதி மூச்சு உள்ள வரை கழகத்தில் இருந்து பணியாற்றுவதையே பாக்கியமாக
கருதுகிறேன்.
அதர்மம் விலகும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், அதர்மம் விலகும். மீண்டும் தர்மமே வெல்லும் என்ற கருத்துக்கு ஏற்ப கழகத்திற்கும், கலைஞருக்கும் அண்ணன் அழகிரி, தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கும் விசுவாசமாக இருப்பேன்.
தவறில்லை என்பதை உணரும் வரை காத்திருப்போம்
எங்கள் மீது தவறு ஏதும் இல்லை என்று கட்சி தலைமை உணரும்வரை காத்திருப்போம். அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தோடு காலம் வரும் கடமையை செய்து முடிப்போம். கழகம் காப்போம். கலைஞரை காப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.