நாளை முதல் 8ம் தேதி வரை மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் 8ம் தேதி வரை மக்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெள்ளம் வடியத் துவங்கினால் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதற்கிடையே நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் மக்கள் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை முதல் மாநகரப் பேருந்துகள் முழு அளவில் இயங்கும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் நாளை முதல் 8ம் தேதி வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.