செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: 11 தி.மு.க.வினர் கைது
சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை தாக்கிய தி.மு.க.வினர் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது. இதற்குப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் தான் தி.மு.க.வில் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று செய்தி பரவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு முன்பாகவும், சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு முன்பாகவும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் திரண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, செய்தியாளர்கள் யாரும் ஸ்டாலின் குறித்து எந்த செய்தியையும் வெளியிடக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்கள். மேலும் சில செய்தியாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் அவர்கள் தாக்கினார்கள்.

காயமடைந்த செய்தியாளர்கள்
இதில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸார் தலையிட்டு செய்தியாளர்களை மீட்டனர்.
இச் சம்பவத்தில் செய்தியாளர் சபீர் அகமது, ஒளிப்பதிவாளர் ஜெயபிரகாஷ், புகைப்படக் கலைஞர் டேனியல் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
திமுக வருத்தம்
பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார்.

வாக்குவாதம் மோதல்
மு.க.ஸ்டாலின் பதவி விலகியதாக கூறியதையடுத்து, திமுக தொண்டர்கள் அவர் இல்லத்தில் குவிந்திருந்தனர். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக கருதி, திமுகவினர் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தீயசக்திகள் ஊடுருவல்
அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். எனினும், பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்காக திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்
செய்தியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தலைவர் ஆர். ரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூகவிரோதிகளை கைது செய்க
இது குறித்து டியுஜே தலைவர் திரு.டிஎஸ்ஆர். சுபாஷ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
பத்திரிக்கையாளர்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலை டியுஜே வன்மையாக கண்டிக்கிறது. மேலும் காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலை நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசில் புகார்
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் நேற்றிரவு புகார் அளித்தனர்.
11 பேர் கைது
இதையடுத்து, காவல்துறையினர் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 11 தி.மு.க.வினரை கைது செய்தனர்.
1. பூந்தமல்லி காட்டுப்பாக்கம் திமுக இளைஞரணி செயலாளர் முரளி,
2. ஆயிரம்விளக்கு பகுதி 111 வது வட்ட இளைஞரணி செயலாளர் அருள்தாஸ்,
3. இவரும் அதே பகுதி இளைஞரணி செயலாளர் கமலக்கண்ணன்,
4. திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் ஜெய்பிரகாஷ்,
5. ஆயிரம்விளக்கு முன்னாள் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார்,
6. திமுக உறுப்பினர் தேவக்குமார்,
7. திமுக உறுப்பினர் முருகன்,
8. திமுக உறுப்பினர் அசோக்,
9. திமுக உறுப்பினர் ராஜேஷ்,
10. திநகர் 117வது வட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் பாபு,
11. திநகர் 119 வது வட்ட இளைஞரணி செயலாளர் விநாயக மூர்த்தி
இவர்கள் 18 வது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 2ம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications