'ஆபரேசன் சைக்கிள்...' ஊர் ஊராக காங்கிரஸ் அலுவலகங்களை கைப்பற்றும் வாசன் கோஷ்டி
சென்னை: காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து ஜி.கே.வாசன் தனிக்கட்சி துவங்க உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதிலுமுள்ள மாவட்ட கட்டிடங்களை கைப்பற்றும் செயலில் இறங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ்காரர்களுக்கும், வாசன் குரூப்புக்கும் நடுவே ஆங்காங்கு மோதல்கள் நடந்து வருகின்றன.

ராஜினாமா
முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜி.கே.வாசன் புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார். விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடியை வாசன் அறிவிக்க உள்ளார்.

கைப்பற்றல் தொடக்கம்
இந்நிலையில் தமிழகத்திலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களை வாசன் கோஷ்டியினர் கைப்பற்ற தொடங்கியுள்ளனர்.

கடலூரில் கலாட்டா
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பத்தில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு இன்று காலை வாசன் ஆதரவாளர்கள் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் மற்றும், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் வந்தனர். அவர்கள், காங்கிரஸ் பெயர் பலகையை அழித்துவிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் என்று எழுதினர்.

40 வருட வரலாறு
இந்த கட்டிடம் உள்ள இடம் வெங்கடேசனின் தந்தையால் 40 வருடங்களுக்கு முன்பு காங்கிரசுக்காக எழுதி கொடுக்கப்பட்டதாம். அதை இப்போது வாசனுக்கு தர வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் எழுதி கொடுத்ததை எப்படி கேட்கலாம் என்கின்றனர் காங்கிரசார்.

144 தடை உத்தரவு
இதையடுத்து, கடலூர் மாவட்ட காங்கிரஸ் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் கலெக்டர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்த பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில்..
இதேபோல் கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் காங்கிரஸ் அலுவலகங்களை வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், வாசன் ஆதரளாவர்களுக்கும், ஈவிகேஎஸ் ஆதரவாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து காங்கிரஸ் அலுவலகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக பிற கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications