ஆவிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை; பாவிகளால்தான் அச்சம் ஏற்பட்டது - சகாயம் ஐ.ஏ.எஸ்
மதுரை: ஆவிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் சில பித்தலாட்ட பாவிகளால்தான் எனக்கு அச்சம் ஏற்பட்டது என்று மதுரையில் நடைபெற்ற விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.
மதுரை பாத்திமா கல்லூரியில் நேற்று கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஊழல் என்பது புற்றுநோய் போன்றது. இது உள்ளிருந்தே சமூகத்தை அரித்துவிடும். கல்லூரி, பல்கலைக்ககப் பாடத்திட்டங்களில் ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகளை சேர்க்க வேண்டும்.

வகுப்பறைகள் மாணவர்களை பேச்சு வல்லமை உடையவர்களாக, ஊழல் எதிர்ப்புடையவர்களாக, நேர்மையானவர்களாக உருவாக்கும் பாசறைகளாக இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவும் முன்னேற வேண்டுமானால் நேர்மை அவசியம்.
இங்கு இல்லாதது எதுவுமே இல்லை. நேர்மை மட்டும் இல்லை. எனவே ஒருபோதும் நேர்மையை விட்டு விடக்கூடாது. மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றி பயம் கொள்ளக்கூடாது. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றுவிட்டால். அனைத்திலும் உங்களால் வெற்றி பெற முடியும். எல்லோருக்கும் திறமை உண்டு. அதை வெளிக்கொணர்வதில் தான் வெற்றி உண்டு என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நான் கிரானைட் வழக்கை விசாரிக்கும் போது நள்ளிரவில் சுடுகாட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உங்களை ஆவிகள் ஏதும் செய்யவில்லையா? என்று கேட்டார்கள். ஆவிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் சில பித்தலாட்ட பாவிகளால்தான் எனக்கு அச்சம் ஏற்பட்டது.
நான் கிராமத்து இளைஞர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களது ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தை கொண்டுள்ளேன். இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications