திமுக- காங். கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவானது! கருணாநிதியை சந்தித்த பின் குலாம்நபி ஆசாத் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தெந்த கூட்டணிகள் உருவாகும் என்பது யூகங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திமுக- காங். கூட்டணி உதயம்
இது தொடர்பாக குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைக்கப்படும். திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் பலமுறை திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன.
ஆட்சியில் பங்கேற்பு இலக்கல்ல
தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் இலக்கு. திமுக தலைமையிலான ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பது இலக்கு அல்ல.
|
கூட்டணி கட்சிகள் குறித்து திமுக முடிவு
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம். இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்து தலைமை தாங்கும் திமுகதான் முடிவெடுக்கும். இன்றைய சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.