சீட்டு தராத கோபம்.. அதிமுகவுக்கு தாவுகிறார் செஞ்சி ராமச்சந்திரன்

கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது திமுகவின் செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலராக வலம் வந்தவர் செஞ்சி ராமச்சந்திரன்.
திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டபோது செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் உள்ளிட்டோர் வெளியேறி மதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர். பின்னர் எல்.கணேசனுடன் சேர்ந்து திமுகவுக்கே செஞ்சி ராமச்சந்திரன் தாவினார்.
ஆனால் எல். கணேசனுக்கு கொடுக்கப்படும் மரியாதை தமக்கு கிடைப்பதில்லை என்பது செஞ்சியாரின் நீண்டகால ஆதங்கமாம். அத்துடன் தற்போதைய லோக்சபா தேர்தலில் கனிமொழி பரிந்துரையின் பேரில் கடலூர் லோக்சபா தொகுதிக்கு சீட்டு கேட்டிருந்தார் செஞ்சி ராமச்சந்திரன். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம் செஞ்சி ராமச்சந்திரன்.
அத்துடன் அவரை எப்படியும் அதிமுகவில் இணைத்துவிடுவதற்கு ஆரணி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையும் முயற்சித்து வருகிறாராம்.
இதனால் இன்று தமது ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்துகிறாராம் செஞ்சி ராமச்சந்திரன். இன்றைய கூட்டத்தின் முடிவில் அதிமுகவுக்கு தாவுவதாக செஞ்சி ராமச்சந்திரன் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications