கெட்டி மேளம் கெட்டி மேளம்.. குவா குவா... தாலி கட்டியதுமே குழந்தை பெற்ற மணப்பெண்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதல் கணவனுடன் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யு.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் பைரப்பா. இவர் கூலி தொழிலாளி. இவரது மகள் ரூபா. அதே பகுதியை சேர்ந்த நாராயணப்பா மகன் சங்கர் இவரும் கூலி தொழிலாளி. இவருக்கும் ரூபாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

ரூபாவின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விடுவதால் அடிக்கடி ரூபாவுடன் தனிமையில் இருந்துள்ளார் சங்கர். இதன் விளைவு ரூபா கர்ப்பமானார். இதையடுத்து, காதலன் சங்கரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் திருமணம் செய்வதாக கூறி காலம் தாழ்த்திவந்துள்ளார் சங்கர். இந்நிலையில் ரூபா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் சங்கரின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். எஸ்.பி கண்ணம்மாள் உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி வெங்கடாசலம் மேற்பார்வையில் போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இருவீட்டாரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலத்து மாரியம்மன் கோயிலில் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ரூபா, சங்கருக்கு திருமணம் நடந்தது. இதன்பிறகு இருவரும் வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்றதும் ரூபாவுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நாகமங்கலம் அரசு மேல்நிலை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு ரூபாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications