சோஷியல் மீடியாவில் விமர்சிப்பதா.. மனசாட்சிபடியே தீர்ப்பளிப்பதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு
சென்னை: நாங்கள் மனச்சாட்சி படி தீர்ப்பு வழங்குகிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஆகியன அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தொடக்க விழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருமதி இந்திரா பானார்ஜி, நீதிபதிகள் வேலுமணி, தாரணி , மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நீதிமன்றங்களை அர்ப்பணித்தனர்.

விவாகரத்து அதிகரித்து விட்டது
விழாவில் இந்திரா பானர்ஜி பேசியது: நாட்டில் விவாகாரத்தும், முறையற்ற திருமணங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்ப நல வழக்குகள், நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இவ்வாறான போக்குககளால், அந்த குடும்பங்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

ஆலோசனை கொடுங்கள்
குடும்ப நல நீதிமன்றங்களில் தாமதமான தீர்ப்பு, ஏழை பெண்களையும், ஏழை குழந்தைகளையும் அதிகம் பாதிக்கும் என்பதால், வழக்கறிஞர்கள் திருமண உறவுகளை பாதுக்காக்க முயல வேண்டும். தங்கள் க்ளையன்ட்டுகளுக்கு நல்ல ஆலோசகர்களாக இருக்க வேண்டும்.

கடவுளுக்கு மட்டும்
நாங்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதனால் இங்கு தரப்படும் தீர்ப்புகளால் எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் கடவுளுக்கு மட்டுமே உண்மையாக இருப்போம். நாங்கள் மனச்சாட்சி படி தீர்ப்பு வழங்குகிறோம். ஆனால் பல சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் தவறாக வருகிறது.

விமர்சனங்களுக்கு பயப்பட வேண்டாம்
நீதிபதிகளை சிலர் வியாபார நோக்கத்திற்காக விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் சட்டப்படி , நியாயப்படி செயல்பட்டு தீர்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு இந்திரா பானர்ஜி தனது உரையின்போது குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications