ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை தமிழகம் ஈர்க்கும்: முதல்வர் ஓ.பி.எஸ். நம்பிக்கை
சென்னை: தமிழகம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மே மாதம் 23, 24-ந்தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான ஆயத்த கூட்டம் சென்னையில் தாஜ்கோர மண்டல் ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. காரணம் தமிழ்நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளில் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பதுதான்.
ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சென்னை இன்று இந்தியாவின் தலைநகராக விளங்குகிறது. மக்கள் தொகையில் நாட்டிலேயே 6-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 2-வது பெரிய மாநிலமாக திகழ்கிறது.

2012-13-ம் ஆண்டு வெளியான தொழிற்சாலைகள் பற்றிய கணக்கெடுப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்வதும் தமிழ்நாட்டில்தான்.
நாட்டின் ஒட்டு மொத்த தொழிற்சாலைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் தரம் 3 ஆக உள்ளது. அதை முதல் இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘விஷன் தமிழ்நாடு 2023' என்ற தொலை நோக்கு திட்டம்தான் இதற்கு காரணம்.

தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிக செழிப்பான, வளர்ச்சி அடைந்த மாநில மாக மாற்ற வேண்டும் என்பதே இதன் மிகப்பெரிய நோக்கமாகும். 2023-ம் ஆண்டில் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் என்பதே அதன் இலக்காகும்.
தமிழ்நாட்டை வறுமையற்ற மாநிலமாகவும், மனித வளமேம்பாட்டில் முன்னணி மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதே குறிக்கோளாகும். நாட்டிலேயே தமிழகத்தில் சிறந்த கட்டமைப்பு சேவை வசதி உள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதில் தமிழகம் முதலிடத்திலும், ஆசியா கண்டத்தில் 3-வது இடத்திலும் உள்ளது.
சென்னையில் வருகிற மே 23, 24-ந்தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மிகப்பெரிய அளவிலான மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ஒற்றை சாளர முறையில் ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு செயல்படுகிறது. எனவே சென்னையில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உங்களையெல்லாம் அழைக்கிறேன்.
தமிழ் நாட்டின் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோளை அடைவோம்.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.












Click it and Unblock the Notifications