அட்சயத்திருதியைக்கு நகை வாங்கப் போறீங்களா? அப்போ இதை கவனிங்க!
சென்னை: அட்சய திருதியைக்கு தங்க ஆபரணங்கள் வாங்கும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என "கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா" அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் இவற்றை தெரிவித்துள்ளார்.
பொதுவாக 1 கிராம் தங்கத்தில் 91.6 மில்லிகிராம் சுத்தத் தங்கமாக இருக்க வேண்டியது அவசியம். இது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு பெற வேண்டும்.

60 சதவீதமே தூய்மை:
இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம் விற்பனையாகிறது. ஆனால் சுமார் 480 டன் அளவுக்கு 60 சதவீத தூய்மையான தங்கத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூபாய் 33,120 கோடி ஆகும். அதாவது இது ஆண்டுதோறும் நுகர்வோர் ஏமாற்றப்படும் தொகையின் மதிப்பாகும்.

வெள்ளை உலோகங்கள் கலப்படம்:
விதிமுறைப்படி தங்கத்தில் செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால் வெள்ளை உலோகங்களான ஆஸ்மியம், பெல்லாடியம், இரிடியம், ருதீனியம் ஆகிய உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன.

கலப்படம் கண்டறிவது கடினம்:
இந்த உலோகங்கள் வெவ்வேறு உருகும் கொதி நிலையைக் கொண்டுள்ளதால் இடித்து பொடி செய்து உருகிய நிலையில் இவற்றை தங்கத்துடன் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட தங்கத்தைக் கண்டறிவது மிகவும் கடினம்.

ஏமாறாமல் இருப்பது அவசியம்:
இன்னும் சில நாள்களில் அட்சய திருதியை நாள் வரவுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் தங்கத்தை ஆர்வமுடன் வாங்கி சேமிக்க உள்ளனர். எனவே தங்கம் வாங்கும்போது கலப்படம், எடைக்குறைவு போன்றவற்றால் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நடவடிக்கை தேவை:
செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களைத் தவிர தங்கத்தில் வேறு உலோகங்களைக் கலப்படம் செய்யும் வியாபாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கவும், நாட்டில் உள்ள ஹால்மார்க் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications