மாப்பிள்ளையை அடக்கி வைக்காவிட்டால்.... 'வாரிசை' மிரட்டும் வம்பானந்தா!
டெல்லி வாழ் வம்பானந்தாவிடம் வாரிசுவின் மாப்பிள்ளை கோஷ்டி வம்பிழுத்ததால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம்.
சென்னை: சமூக வலைதளங்களில் தம்மை சீண்டும் மாப்பிள்ளையை அடக்கிவைக்காவிட்டால் உங்களுக்கு எதிரான ஆவணங்களும் வெளியாகும்..பரவாயில்லையா? என தமிழகத்தின் 'வாரிசு' ஒருவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்திருக்கிறாராம் டெல்லி வாழ் வம்பானந்தா எம்.பி.
குடும்ப அரசியல் என்பது எப்போதுமே பேராபத்தாகவே முடிந்திருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கின்றன.
தமிழக அரசியல் கட்சிகளிலும் குடும்ப அரசியல், கிச்சன் கேபினெட் என அனைத்தும் கொடிகட்டிப் பறக்கிறது. பல நேரங்களில் கூட்டணிகள் தொடர்பான முடிவுகளை கிச்சன் கேபினட்டுகள்தான் தீர்மானிக்கவும் செய்கின்றன.
வம்பானந்தாவிடம் சரண்
கடந்த சட்டசபை தேர்தலின் போது 'வாரிசு' மாமாவுக்கு எதிராக டெல்லிவாழ் வம்பானந்தா எதுவும் பேசக் கூடாது என்பதற்காக மாப்பிள்ளை ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வம்பானந்தாவை நேரில் சந்தித்து அவரு மாதிரி கொள்கையெல்லாம் எங்களுக்கு எதுவும் இல்லைதானே.. எங்களுக்கு எதிராக எதுவும் செய்யாதீங்க என சரணடைந்திருக்கிறார்.
வாரிசு தலைக்கு பாராட்டு
இந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் 'வாரிசு' தலைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளை வம்பானந்தா தெரிவித்து வந்தாராம். அண்மையில் ட்விட்டரில் வம்பானந்தாவிடமே மாப்பிள்ளை கோஷ்டிகளில் ஒருவர் வம்பிழுத்திருக்கிறார்.
வம்பானந்தாவிடம் வம்பு
இதனால் கடுப்பாகிப் போன வம்பானந்தா, திரைப்படம் ஒன்றை சுட்டிக்காட்டி மாமாக்களுக்கு எப்பவுமே மாப்பிள்ளைகளால்தான் பஞ்சாயத்து என எகிறியிருக்கிறார். இதனால் அவரை சமாதானப்படுத்தும் வகையில் 'வாரிசு'வின் லாபிகளில் ஒருவர் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
மறைமுக மிரட்டல்
அப்போதுதான் மாப்பிள்ளையை அடக்கி வைக்க சொல்லுங்க.. இல்லை எனில் இருக்கிற ஆவணங்களை ரிலீஸ் செய்துவிடுவேன்... என்னை எதுவும் கேட்க கூடாது என எச்சரிக்கை விடுத்தாராம் அந்த வம்பானாந்தா. மாப்பிள்ளையை பற்றி மாமாவிடம் எப்படி சொல்வது என கையை பிசைந்து நிற்கிறார் அந்த லாபியிஸ்ட்.