செல்போனில் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு தூக்குப் போட்டுக்கொண்ட மாணவர்
கவின்கலைக்கல்லூரி மாணவர் வேலூரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியரின் டார்ச்சர் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
சென்னை: கவின் கலைக் கல்லூரியில் படித்த மாணவர் வேலூரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக செல்போனில் வாக்குமூலம் அளித்துள்ளதால் மாணவர்கள் போராட்டம்.
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ்,வயது 24. சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் படித்து வந்தார்.
பிரகாஷ் அடுக்கம்பாறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றிரவு, அடுக்கம்பாறை அருகே உள்ள குழவிமேடு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பிரகாஷின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், விரைந்து வந்து மாணவன் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர் தனது மரணத்திற்கு முன்பாக செல்போனில் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மரணத்திற்குக் காரணம் துறைத்தலைவர் கொடுத்த டார்ச்சரே காரணம் என்று கூறினார்.
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு துறைத்தலைவர் தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவ-மாணவிகள் இன்று கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா. போராட்டத்தின்போது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவர் பிரகாஷிடம் உறுதி அளித்திருந்ததாக கூறினார்.