கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப நடவடிக்கை தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர மக்கள் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் கோவை மற்றும் திருப்பூர் மாநகரங்களில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியிருக்கிறது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் என கண்களில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கியவர்கள் பாலசுப்பிரமணியம் என்ற காவலர் மீதும் கல் வீசி தாக்கியுள்ளார்கள்.
போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதோடு மட்டுமின்றி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்களின் வாகனங்கள், மோட்டார்பைக்குகள் மற்றும் ஆட்டோக்களையும் எரித்துள்ளார்கள். இந்த வன்முறையை காவல்துறை முன்கூட்டியே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கவலைக்குரியது.
கொலையை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களுக்கும், அரசு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதையும், சமூக அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் சவால் விடும் வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதிமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து இந்து முன்னனி பிரமுகர்கள் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்.
இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கி, தாக்குதலுக்குள்ளான காவலர் பாலசுப்பிரமணியத்திற்கு உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும். சமூக மற்றும் மத நல்லிணக்கத்தின் தொட்டிலாக தமிழகம் தொன்று தொட்டு திகழ்ந்து வருகிறது. அப்பேர்பட்ட பெருமைக்குரிய மண்ணில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது.
இது போன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக காவல்துறைக்கு இருக்கிறது. அதற்கு ஏற்ற முழு சுதந்திரத்தை காவல்துறைக்கு அதிமுக அரசு அளித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.