தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை பயணம் திடீர் ரத்து
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையிலேயே தங்கி உள்ளார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.
இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டவர்களை கைது செய்யப்பட்டு சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை, திருச்சி, கரூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை செல்ல திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications