அரசுக்கே தெரியாமல் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார் ஆளுநர்.. அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!
சென்னை : அரசுக்கே தெரியாமல் புதிய கல்விக்கொள்கை பற்றி பேச ஊட்டியில் துணைவேந்தர் கூட்டத்தை தமிழக ஆளுநர் கூட்டுகிறார், இணை வேந்தரான எனக்கு தெரிவிக்கவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு முன்னெடுத்து வரும் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு திமுகவில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது "அரசுக்கே தெரியாமல் ஜூன் 5ஆம் தேதி உதகையில் புதிய கல்விக்கொள்கை பற்றி பேச துணைவேந்தர் கூட்டத்தை ஆளுநர் அறிவித்துள்ளார். கூட்டம் நடத்துவது பற்றி இணைவேந்தராக இருக்கும் எனக்கு ஆளுநர் தகவல் அளிக்கவில்லை.
அண்ணாமலை ஒரு அரைகுறை, அவருக்கு வரலாறும் தெரியாது, நடக்கும் நிகழ்ச்சியும் தெரியாது. கல்விக் கொள்கை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் நேரடியாக விவாதிக்க தயார். வரலாறே தெரியாமல் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டது எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு தெரியாமலா இது நடந்தது என்று அண்ணாமலை கேட்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கடைசி சிண்டிகேட் கூட்டம் ஏப்ரல் 20ல் நடந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 17ல் தான் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார்" எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் மீடியம் மெக்கானிக்கல், சிவில் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 20-ஆம் தேதி அறிவித்தது.

இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
"தமிழ் வழிக் கல்வியை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக எனக்கோ, அரசுக்கோ தெரியவில்லை. இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications