ஜல்லிக்கட்டு அவசர சட்டம்.. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார். ஞாயிறு அன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து மிக தீவிரமான போராட்டங்கள் வெடித்தன. தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஆலோசனை நடத்தி அவசர சட்டம் பிறப்பிப்பதாக முடிவு செய்துள்ளது. அவசர சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் வருவதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக இன்று சென்னை வருகிறார்.
இதன் பின்னர் அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக அதிகாரிகள், முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications