சசிபெருமாள் பாணியில் செல்போன் டவர் ஏறி போராடுவோர் அதிகரிப்பு: வேலி அமைக்க உத்தரவு
சென்னை: மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்தார். சசிபெருமாளின் பாணியை பின்பற்றி செல்போன் டவர்களில் ஏறி போராடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டவரைச் சுற்றி வேலி அமைக்கவும், கண்காணிக்கவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில், மொபைல் போன் டவர் மீது ஏறி, காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். திடீரென மயங்கி விழுந்து, இறந்தார். இதையடுத்து, பூரண மதுவிலக்கு கோரிக்கை, தமிழகம் முழுவதும் வலுத்துள்ளது. பல்வேறு கட்சிகள், வரும் 4ம் தேதி, கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகத்தின தென் மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டவர் ஏறி போராட்டம்
இதனிடையே காந்தியவாதி சசிபெருமாள் பாணியில் செல்போன் டவர்களில் ஏறி, போராடுவோரின் எண்ணிக்கை, திடீரென அதிகரித்துஉள்ளது. ம.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் நேற்று, டவரில் ஏறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

சசி பெருமாள் ஆதரவாளர்
சேலத்தில் மொபைல்போன் டவர் மீது ஏறி, சசிபெருமாள் ஆதரவாளர் சந்திரன் போராட்டம் நடத்தினார். சசிபெருமாள் ஆதரவாளர்கள், சேலம், இ.மேட்டுக்காடு அருகே சின்னம்பட்டி சாலையில் உள்ள டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் போராட்டம்
காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவில் அருகே, ஒரு வீட்டின் மாடியில் உள்ள மொபைல் போன் டவர் மீது, மணி, 23, என்பவர் ஏறி, மதுக்கடைகளை மூடக்கோரி இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தினார். போதையில்அ தள்ளாடிய அவர், 'இளைஞர்களை கெடுப்பது மது தான்; நானும் குடித்திருக்கிறேன்' என்று கூறினார்.

கல்லூரி மாணவர் போராட்டம்
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 20 என்ற கல்லுாரி மாணவர், நேற்று காலை, ஆற்காடு அண்ணா சாலை மின்வாரிய அலுவலக கட்டட மாடியில், 70 அடி உயரமுள்ள, சிக்னல் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.

இரு இளைஞர்கள்
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரியில் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, ஜஸ்டின் சுதாகர், ராஜ்குமார் என்ற இரு வாலிபர்கள், சனிக்கிழமையன்று இரவு மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரியில் கொதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள ஆற்றுார் பகுதியில், நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற டேவிட்ராஜ் என்பவர், திடீரென மொபைல் போன் கோபுரத்தில் ஏறி, கோஷமிட்டார்.

கண்காணிக்க உத்தரவு
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதால், தமிழக டி.ஜி.பி., மொபைல் போன் டவர்களை கண்காணிக்க, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். அவரவர் பகுதியில் எத்தனை மொபைல் போன் டவர்கள் உள்ளன என்பதை நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். டவர்களில் யாரும் ஏறிவிடாதவாறு, போலீசாரை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில், மொபைல் போன் டவர்கள் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வேலி அமைக்க உத்தரவு
தமிழகம் முழுவதும், தனியார் மொபைல் போன் நிறுவன டவர்களை சுற்றி வேலி அமைப்பது குறித்து, அந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த, வருவாய் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications