பல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி: சகாயம் அறிக்கை பரிந்துரை சொல்வது என்ன?
சென்னை: பல ஆயிரம் கோடி முறைகேடுகள் தொடர்பான, கிரானைட் மோசடி பற்றிய விசாரணை அறிக்கையை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று, சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

*600 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை
*7000 ஆவணங்கள் அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
*சுமார் 100 ஆவணங்கள் புகைப்பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
*அறிக்கை முற்றிலும் சீல்வைத்து அறிக்கையின் அம்சங்கள் வெளியே கசியாமல் தரப்பட்டுள்ளது.
*சகாயம் கமிட்டி சார்பிலான வழக்கறிஞர் வி.சுரேஷ், கமிட்டியின் பரிந்துரைகளை முன்வைத்தார்.
*சிபிஐயின் கீழ், சிறப்பு விசாரணை குழு அமைத்து மோசடி பற்றி விசாரிக்க வேண்டும் என்பது முக்கிய பரிந்துரை.
*சிறப்பு விசாரணை குழுவில் வெளி மாநில அதிகாரிகள்தான் இடம்பெற வேண்டும் என்பதும் கோரிக்கை.
*விசாரணை முழுக்க ஹைகோர்ட் கண்காணிப்பில் நடக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம்.
*விசாரணைக்கு உதவிய, அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்புக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய வாதத்தின்போது, குறுக்கிட்ட மாநில அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, முத்தரப்புக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்பது சரியல்ல. போர்வைக்கு அடியில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது போன்றது இது என்றார்.
ஆனால், சுரேஷ் கூறுகையில், "அரசு மற்றும் நீதித்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் உதவியோடு கடந்த 20 வருடங்களாக சட்டவிரோத கிரானைட் தொழில் நடந்துள்ளது. எனவே, வழக்கில் உதவியவர்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்றார்.
வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications