இல்லத்தரசிகளுக்கு ஓர் கசப்பான செய்தி... சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு
ஜிஎஸ்டியால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.14.50-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இனி ரூ.14.50 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளை மக்கள் சந்தித்தனர். மேலும் மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்ட அதிரடிகளையும் செய்து வருகிறது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே, கடந்த 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.560 ஆக இருந்தது. தற்போது ஜிஎஸ் வரியால் ரூ.14.50 உயர்த்தப்பட்டு, ரூ.574.50 செலுத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.
இதற்கு மானியமாக ரூ.108.42 கிடைக்கும். இது வழக்கம் போல் வங்கியில் செலுத்தப்படும். இதில் விநியோகஸ்தருக்கான கமிஷன் ரூ.47.63 ஆகவும், ஜிஎஸ்டிக்கு ரூ.24.96 ஆகவும் (மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.12.48 ஆகவும்), போக்குவரத்து கட்டணமாக ரூ.19.96 ஆகவும் சென்னையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 5 சதவீத ஜிஎஸ்டி வரிதான் நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்துவிடுமா அல்லது மக்களின் துயரத்தை போக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.