ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலய குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்
கும்பகோணம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா இன்று முதல் தொடங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் பதிகம் பாட பெற்றது. இந்த கோவிலில் குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பெயர்ச்சி முதல்கட்ட லட்சார்ச்சனை விழா இன்று வியாழக்கிழமை தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மீண்டும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஆகஸ்டு 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை 2வது கட்ட லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறும்.
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையரும், தக்காருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications