ரப்பர் குண்டுகள் யாரிடம் இருக்கும் தெரியுமா?... எச்.ராஜா சொல்றாரு கேளுங்க!
மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட ரப்பர் குண்டுகள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட ரப்பர் குண்டுகள் காவல்துறையிடம் தான் இருக்குமே தவிர ராணுவம், துணை ராணுவத்திடம் இருக்காது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் கடலில் இருந்து 7 கடல்மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பிச்சை, ஜான்சன் என்ற 2 மீனவர்கள் கையில் ரப்பர் குண்டு அடிபட்டு படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு ஆளாகி கரை திரும்பிய மீனவர்கள் இந்திய கடற்படை தங்களைத் தாக்கியதாக கூறினர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்கள் சுடப்பட்டது உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம். ஆனால் இந்திய கடற்படை மீனவர்களை தாக்கவில்லை, அவர்கள் சொல்வது போல ரப்பர் குண்டுகள் எதுவும் இந்திய கடற்படையிடம் இல்லை. அந்த குண்டுகள் எங்கிருந்து வந்தது என்று எங்களுக்குத் தெரியாது என்று கூறி இருந்தார்.
மீனவர்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய கடற்படை மீது குற்றம் சுமத்தாதீர்கள் என்று மட்டுமே திரும்பத் திரும்ப தன்னுடைய பேட்டியில் கூறி இருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு வருத்தத்தை ஏற்படுத்துவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம் தான் இருக்கும். இராணுவம் மற்றும் துணை இராணுவத்திடம் இருக்காது https://t.co/I5LlFy705P
— H Raja (@HRajaBJP) November 18, 2017
இதனிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் இரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம் தான் இருக்கும். ரப்பர் குண்டுகள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications