31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு
ஜோலார்பேட்டை: 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டில் உறவினர்களை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிசசந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர்.
இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலைச் செய்ய வேண்டும் என கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக அரசு
அந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு வழக்கறிஞர்கள் பல கட்ட வாதங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுவே இந்த வழக்கின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளனுக்கு விடுதலை கிடைக்கும் என பலர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
விசாரணைக்கு வந்த வழக்கு
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மே 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று பேரறிவாளன் விடுதலை வழக்கில் தீர்ப்பை வெளியிட்டனர்.
பேரறிவாளன் விடுதலை
அதன்படி 142 ஆவது சட்டவிதியின் படி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து வருகிறார்கள். திராவிட இயக்கத்தினரும் தமிழ் அமைப்புகளும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
கண்ணீரில் நனையும் ஜோலார்பேட்டை வீடு
இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டில் உணர்வுப்பூர்வ காட்சிகள் நடந்துள்ளன. பேரறிவாளனை அவரது சகோதரிகள், அவர்களது மகள்கள், தாய், தந்தை, உறவினர்கள் என கட்டி அணைத்து கண்ணீர் விடுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு பேரறிவாளன் இனிப்புகளை வழங்கினார்.