குற்றாலம் அருவிப் பகுதியில் மது, எண்ணைய் குளியல் கூடாது.. உயர்நீதிமன்றம் தடை!
சென்னை: குற்றாலத்தில் உள்ள அருவிப் பகுதிகளில் 37 விதிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது விற்பனை கூடாது, எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்பது அவற்றில் சில.

புனித அருவி
மேற்க்குத்தொடர்ச்சி மலைகளில் புனிதம் வாய்ந்த அருவியாக குற்றால அருவியும், புனித நதியாக தாமிரபரணி ஆறும் நம் முன்னோர்களால் மட்டுமின்றி நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாசு அதிகரிப்பு
சமீபகாலமாக தாமிரபரணி நதியும், குற்றால அருவியும் மாசுபட்டு அதன் புனிதத்தை இழந்து வருகின்றன. இதனை இயற்கை ஆர்வலர்களும், சமூக நல அமைப்பினரும் கண்டு எதிர்ப்பு தெரிவித்தாலும் மாசுப்படுத்துவதை தடுக்க முடியாத நிலை உள்ளது.

சீசன் காலத்தில்
மேலும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசனும், செப்டம்பர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் சபரிமலை சீசன் காலங்கள் ஆகும்.

தீராத பிணி தீரும்
இந்த நாட்களில் குற்றாலத்திற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்குள்ள அருவி நீரில் குளித்தால் தீராத பிணி எல்லாம் தீரும் என்பதும், இங்கு வரும் அருவி நீரானது சுமார் 2ஆயிரம் மூலிகைகளில் தவழ்ந்து வருவதால் மேற்கண்ட காலங்களில் குளித்தால் எந்த நோயும் அண்டாது.

சிறப்பு வாய்ந்த குற்றாலம்
இப்படி பல்வேறு சிறப்புக்கள் நிறைந்த புனித குற்றாலத்தில் சமீப காலமாக குளிக்க வருபவர்கள் அருவி நீரை மாசுப்படுத்தும் வண்ணம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் குளியல் நடத்துவதால் அருவி நீர் மாசுபடுவது மட்டுமின்றி, முழுமையாக சுகாதாரமும் பாதிக்கப்படுவதாலும், மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பிடவசதி, இரவில் குளிக்கும் பெண்களுக்கு மின் விளக்கு வசதி, கூடுதல் வாகன கட்டண வசூல் இப்படி எராளமான குறைகளால் நிரம்பி வழிந்த குற்றாலத்தின் அவலத்தை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

37 விதிமுறைகள்
அந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதி மன்றம் குற்றாலத்தில் உடனடியாக 37 விதிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு
அதில் பெண்களுக்கு பாதுகாப்பான உடைமாற்றும் அறை, அதிக மின்வெளிச்சம் கொண்ட விளக்குகள் பொருத்துதல், கழிப்பிடவசதி, நவீன கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரசாயன பொருட்களுக்குத் தடை, சோப்பு ஷாம்பு, எண்ணெய்க்கு தடை, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை, அருவிக்கரையில் ஆம்புலன்ஸ் வசதி, காவல் கட்டுப்பாட்டு பிரிவு உள்ளிட்ட 37 விதிமுறைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது.

மதுவுக்கும் தடை
மேலும் அருவிப் பகுதியில் மது விற்பனைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications