நிர்வாண மசாஜ் புகார்... சசிகலா புஷ்பா உட்பட குடும்பத்தினர் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்!!
மதுரை: நிர்வாண மசாஜ் உள்ளிட்ட புகார் தொடர்பான வழக்கில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் தாயார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் கூறியவர் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் போலீசில் பாலியல் தொல்லை புகார் ஒன்றை அளித்தனர். இதனடிப்படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 6 வார காலத்துக்கு சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. அத்துடன் கடந்த 29-ந் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
அன்றைய தினம் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சசிகலா புஷ்பா, கணவர், மகன் மற்றும் தாயார் ஆகியோரது ஜாமீன் மனு மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது.