லிங்கா வரிச்சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
லிங்கா படத்துக்கு வரி விலக்கு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேட்டூரைச் சேர்ந்த ஒரு நபர் லிங்கா படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா என்ற படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.
பொதுவாக தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கின்ற திரைப்படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ‘லிங்கா' என்பது தமிழ் வார்த்தை அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை ரத்து செய்யவேண்டும்,' என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்வதற்கு என்று சில வரையறை உள்ளது. வரி விலக்கு அளிப்பதை எல்லாம் எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா? இல்லை தள்ளுபடி செய்யட்டுமா?' என்று கேட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறியதை தொடர்ந்து, மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications