சசிகலா ஆதரவாளர்களுடன் முற்றுகையிடலாம்? ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிப்பு!
ஆளுநர் மாளிகையை சசிகலா தம்முடைய ஆதரவாளர்களுடன் முற்றுகையிடலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு சசிகலா கடிதம் எழுதிய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு தாமே முதல்வராவேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதனால் தம்மால் முதல்வராக முடியாதோ என பதற்றத்திலும் விரக்தியிலும் இருக்கிறார் சசிகலா. அத்துடன் இன்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் சசிகலா.
இதனிடையே சசிகலா தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூடும் என தகவல்கள் பரவியது. இதனால் தற்போது ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.