தொடரும் கனமழை- வடியாத வெள்ளம்: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சாலையில் நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கள் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன. வீடுகளுக்குள் சென்ற நீர் வடியாததால் தோற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் எங்கெங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளம் வடியாத காரணத்தால் இன்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் மழை காரணமாக நவம்பர் 12, 13, 14 தேதிகளில் நடக்க இருந்த பருவத் தேர்வுகளை, டிசம்பர் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகமோ தொடர் மழையிலும் தேர்வுகளை நடத்தி வந்தது. இந்த நிலையில், தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளுக்கு நவம்பர் 13, 14 தேதிகளில் நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 27ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கிய போதும், 9ம் தேதி முதல் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கடந்த, நான்கு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், இரவில் கடும் குளிர் நிலவுகிறது. தொடர் மழை காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நேற்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால், கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து, கலெக்டர் ராஜேஸ் உத்தரவிட்டார்.