மழையால் துண்டிக்கப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம்: தத்தளிக்கும் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் ராஜாளி கப்பற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், சாலைகள் துண்டிப்பு, அதிகளவிலான தண்ணீர், தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன; பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு தொடர்கிறது. மாவட்டத்தின் அனேக குடியிருப்பு பகுதிகள் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கொசஸ்தலை ஆறு, கூவம், ஆரணி, நந்தியாறு ஆகிய நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கிராமங்கள் மூழ்கின
செங்கல்பட்டு, தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், ஏரியிலிருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், கிளியாற்றின் கரையோரங்களில் உள்ள 9 கிராமங்கள் முற்றிலும் தண்ணீரில் முழ்கியுள்ளன. அப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிராமங்களுக்குள் தண்ணீர்
செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் உள்ள குண்டூர் ஏரி உடைந்ததால், குடியிருப்புகளில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. திருப்போரூர் அருகே உள்ள பெரியஇரும்பேடு ஏரி, பெருங்களத்தூர் ஏரி உடைந்ததால், தாழ்வான பகுதிகளில் உள்ள 17 கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வெள்ளம்
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் வெள்ள நீர் புகுந்ததால், நோயாளிகள் அருகில் உள்ள வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மீட்புபணியில் சிரமம்
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அரக்கோணத்தை சேர்ந்த ராஜாளி கடற்படையினர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் வருவாய்த்துறை உள்பட அனைத்து துறை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு பகுதியில் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

படகுகள், ஹெலிகாப்டர்கள்
வெள்ளம் சூழ்ந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். சாலைகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால், மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ராஜாளி கடற்படையினருக்கு உதவியாக 30 படகுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன; பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு தொடர்கிறது. மாவட்டத்தின் அனேக குடியிருப்பு பகுதிகள் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கொசஸ்தலை ஆறு, கூவம், ஆரணி, நந்தியாறு ஆகிய நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர்- திருத்தணி, திருவள்ளூர்- திருவாலங்காடு- அரக்கோணம் மற்றும் திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர், பள்ளிப்பட்டு- பொதட்டூர்பேட்டை ஆகிய போக்குவரத்து மார்க்கங்களில் போக்குவரத்துகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை-திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications