தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பறிமுதல்- புகார் தரலாம்
தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல், விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்த 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் மற்றும் விதிமீறல்கள் குறித்து 10 சிறப்பு குழுக்கள் இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் ஆய்வு நடத்துகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுபடி தீபாவளி பண்டிகை காலமான 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆம்னி பேருந்து பயண கட்டணத் தொகை 2015-16ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையையே வசூல் செய்ய வேண்டும். பேருந்து உரிமையாளர்களால் உயர்த்தப்பட்ட தொகையை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல், விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்த 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்கள் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள், தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் மூலம் வசூலிக்கும் முறை தொடங்கியுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இந்த முறையில் தமிழகத்தில் பதிவு செய்து இயக்கப்படும் 1200 ஆம்னி பேருந்துகள் குறித்தும், பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கப்படும் 800 பேருந்துகளின் விவரங்கள் குறித்தும் முழு அறிக்கையை நாங்கள் தயாரித்துள்ளோம். இதில், சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் வசூலித்த கட்டணம் உள்ளிட்டவற்றை நாங்கள் வைத்துள்ளோம். அதன்படி, நாங்கள் ஆய்வு நடத்துவோம். வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலித்தது உறுதி செய்தால், சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதற்காக, 10 சிறப்பு குழுக் கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஒவ் வொரு குழுவிலும் ஒரு ஆர்டிஓ மற்றும் 5 வாகன ஆய்வாளர்கள் இருப்பார்கள். கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை, வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 28ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் ஆய்வு நடத்துவோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகளை பாதியில் இறக்கி விடாமல், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து சென்றடையும் இடத்தில் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் அதிக கட்டணம் குறித்து போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடலூரில் பறக்கும் படை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி கடலுார் மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வதைத்தடுக்க கடலுார் மாவட்டத்தில் 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் போக்குவரத்துறை, போலீசார் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்திலிருந்து புறப்படும் ஆம்னி பஸ்கள் மற்றும் கடலுார் வழியாக செல்லும் பஸ்களை திடீர் ஆய்வு மேற்கொள்வர். பயணிகளை விசாரணை செய்து, அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்து பறிமுதல் செய்யப்படும்.
இது தொடர்பாக பயணிகள் புகார் செய்ய கட்டுப்பாட்டு அறை 04142-234035 எண்ணிலும், பறக்கும் படை குழுவில் 94436 28578, 94430 04333, 94422 76658, 94422 94411 மற்றும் 94422 50196 ஆகிய மொபைல் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளனர்.