பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பட்டா போட முடியாது.. 90க்கு பின் இடம் வாங்கியவர்களுக்கு வருகிறது ஆப்பு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பத்திர பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை: ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பட்டா போட்டு வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட் தடை உத்தரவிட்டுள்ளது. இதனால் சதுப்பு நிலம் காக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மிக முக்கியமான நீர்நிலைப் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள காயிதே மில்லத் நகரை சேர்ந்த 62 பேர், ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பள்ளிக்கரணையில் 30 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருவதாகவும், மின்சாரம், குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், அவர்கள் குடியிருக்கும் பகுதியை வனத்துறையிடம் ஒப்படைத்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி 62 பேரும் ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதி கிருபாகரன், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தார். மேலும், 1990 முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு பட்டா வழங்கிய விவரங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறைக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். வேளச்சேரி ரயில் நிலையம், பல்லாவரம் சுற்றுவட்ட சாலை ஆகியவையும் சதுப்பு நிலப் பகுதிகள் தான். சதுப்பு நில பகுதிகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பள்ளிக்கரணையில் உள்ள 425 ஏக்கர் சதுப்பு நிலத்தை உள்ளாட்சி நிர்வாக துறை, 2012 டிசம்பர் மாதம் வனத்துறைக்கு மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications