பெண்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு ஹெல்மெட் அணிய விதிவிலக்கா?... ஆக.19 ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை : பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆகஸ்ட் 19-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உயர்நீமன்றம் அறிவித்துள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜூலை 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் வாகனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பின்னர் ஐ.எஸ்.ஐ. ஹெல்மட்டை வாங்கியதற்கான ரசீதை காண்பித்தால் தான் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்ற காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்திலிருந்து பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு விலக்கு கோரி வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்டாய தலைக்கவசம் சட்டம் நடைமுறைக்கு வந்தும் கடந்த 2 வாரங்களாக இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக நீதிபதி கிருபாகரன் கூறினார்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தலைக்கவசம் அணியாத இருச்சக்கர வாகன ஓட்டிகள் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இச்சட்டத்திலிருந்து பெண்கள், நோயாளிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆகஸ்ட் 19-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
ஹெல்மெட்டுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications