ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்குக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

அம்மனுவில், "கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற வெற்றிவேல் எம்.எல்.ஏவாக இன்னும் 8 மாதங்கள் நீடிக்க முடியும்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த முக்கிய காரணமும் இல்லை. ஆனால் எந்த kaaரணமும் இல்லாமல் சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமும் உடனே அறிவிப்பாணையை வெளியிட்டது.
சரியான காரணத்தை குறிப்பிடாத அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று, மனதைச் செலுத்தாமல் இடைத்தேர்தலுக்கு சபாநாயகர் பரிந்துரைத்தது சட்டத்துக்கு முரணானது. இந்த தேர்தலில் மக்களுக்கும் சந்தேகம் உண்டு. மக்களின் நம்பிக்கையை வெற்றிவேல் சிதைத்துவிட்டார்.
இந்த தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுவதற்கு வெற்றிவேல் முழு பொறுப்பாகிவிட்டார். அங்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு வெற்றிவேல்தான் காரணம் என்பதால் 2011 ஆம் ஆண்டு அந்த தொகுதி தேர்தலுக்கு செலவான தொகையை வெற்றிவேலிடம் தேர்தல் கமிஷன் வசூலிக்க வேண்டும்.
அந்த தொகுதியில் தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். எனவே செலவான தொகையை ஜெயலலிதா மற்றும் வெற்றிவேலிடம் இருந்து வசூலிக்கும் வரை இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்.
தேர்தல்களில் முறைகேடுகள் நடக்காத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ற வகையில் நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "சட்டத் திருத்தங்களைச் செய்வது சட்டசபையின் பணி. அதை ஹகோர்ட் செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோருகிறார். அதுவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகளை திருத்த உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்ய முன்வந்தால் அதை நாங்கள் தடுக்கமுடியாது. இதில் மக்களின் கருத்து என்ன என்பது ஓட்டுப்பெட்டியில் பிரதிபலிக்கும். எனவே, இதுபோன்ற மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications