போலி குண்டர் சட்ட உத்தரவு.. எஸ்.ஐ, வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு
மதுரை: போலியான குண்டர் சட்ட உத்தரவு தயாரித்தாக போலீஸ் எஸ்.ஐ. மற்றும் வி.ஏ.ஓ.வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மாரிராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர், "நான் 17 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி உள்ளேன். விருதுநகர் மாவட்டம் சாத்துரில் உள்ள எனது உறவினவர் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவேன். அப்போது, உள்ளூர் போலீசார் என் மீது கள்ளச் சாராயம் விற்றதாக பொய் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி, சுந்தரபாண்டியன், குருவெங்கட்ராஜ் ஆகியோர் என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டனர். நான் அதை கொடுக்க மறுத்தால், என்னை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீஸ் எஸ்.ஐ. சுரேந்திர குமார் மற்றும் புளியங்குடி வி.ஏ.ஓ. ஜேசுராஜ் ஆகியோர் போலியான குண்டர் சட்ட உத்தரவு ஒன்றை தயாரித்து, அதை எனது தாயார் வீட்டின் கதவில் ஓட்டினர். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் தயாரித்த குண்டர் சட்ட உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ. மற்றும் வி.ஏ.ஓ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் " என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மனுதாரரின் புகார் குறித்து 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று புளியங்குடி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். புகாரில் முகாந்திரம் இருந்தால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications