மகாமக வழக்கில் பதிலளிக்காவிடில் தலைமை செயலாளர் நேரில் வர வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: கும்பகோணம் மகாமகம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பொறுமையாக கேட்கும் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை முறையாக பதில் அளிக்காவிட்டால், தலைமைச் செயலாளரை நேரடியாக அழைத்து பதில்பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாமகம் விழாவுக்காக கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகராட்சிநிர்வாகத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நீதிமன்ற கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே தாங்கள் கேட்ட 4 கேள்விகள் குறித்து ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முதண்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.