போலீஸ்காரர் கொலை வழக்கு: தமிழர் விடுதலைப் படையின் சுப.இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!
போலீஸ்காரர் கொலை வழக்கில் தமிழர் விடுதலைப் படையின் சுப. இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழர் விடுதலைப்படையை சேர்ந்தவர்கள், 1991ம் ஆண்டு புத்தூர் போலீஸ் நிலையத்தை தாக்கி போலீஸ் ஒருவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் சுப. இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை சாராயம் விற்றதாக கூறி போலீசார் பிடித்த வந்து பாலியல் கொடுமை செய்தனர். இதனையடுத்து, தமிழர் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள், 1991ம் ஆண்டு புத்தூர் போலீஸ் நிலையத்தை தாக்கி ராஜேந்திரன் என்ற போலீஸ்காரரை வெட்டிக் கொன்றதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது, போலீஸ் நிலையத்தை தாக்கி, அங்கிருந்த துப்பாக்கிகளும் கொள்ளை அடித்து செல்லப்பட்டது. இந்த கொலை வழக்கில், தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த லெனின், சுப.இளவரசன், அமல்ராஜ், குமார், சுந்தரம், வெங்கடேசன், மணிமாறன், முருகேசன், நல்லரசு, ரவி, இளங்கோமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு சுந்தரத்துக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையையும் விதிக்கப்பட்டது.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஆதிநாதன் ஆகியோர் விசாரித்தனர். அதில் சுப.இளவரசன், அமல்ராஜ், குமார் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
சுந்தரம், வெங்கடேசன், மணிமாறன் உள்ளிட்ட 6 பேருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.