மனதை குளிர்விக்கும் மனிதநேயம்! தலைமுறைகளை கடந்து தொடரும் இந்து -இஸ்லாமியர் ஒற்றுமை! ருசிகர பின்னணி!
திருவாரூர்: பிரிவினை, மோதல் போன்ற செய்திகளுக்கு மத்தியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்துக்கள் -இஸ்லாமியர்கள் இடையே தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒற்றுமை மனதை குளிர்விப்பதாக கூறியிருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
இஸ்லாமியர்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான கஃபன் துணியை (தூய வெள்ளை துணி) ஒரு ரூபாய் காசு வாங்காமல் 2 தலைமுறைகளாக கொடுத்து வருகிறார் தண்டபாணி. இது குறித்து தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவு வருமாறு;

''திருவாரூர் மாவட்டத்தில் கட்டிமேடு - ஆதிரெங்கம் என்ற இரட்டை கிராமங்கள் சமூக நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும் பட்டியலில் உள்ள ஊர்கள்.
இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், தலித் கிரித்தவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் தண்டபாணி என்பவர் ஓசையின்றி செய்து வரும் சேவைகள் மனித நேயத்திற்கு சான்றாக உள்ளது.
முஸ்லிம்கள் இறந்த பிறகு அவர்களது உடலை தூய வெள்ளை துணியால் போர்த்தி அடக்கம் செய்வார்கள். அந்த துணியை முன்பு கட்டி மேடு கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சண்முகம் தொடர்ந்து கொடுத்து வந்தார்.அவர் இறந்த பிறகும் அந்த சேவையை அவரது மகன் தண்டபாணி தொடர்ந்து செய்து வருகிறார்.
சவூதிக்கு சென்று சம்பாதிக்கும் போதும் அதை விடாமல் செய்தவர், இன்றும் தொடர்ந்து செய்கிறார். ஒரு ரூபாய் கட்டணம் இன்றி மனித நேய பணியாக அதனை செய்து வருகிறார். செல்வந்தர்கள், ஏழை என அவ்வூரில் உள்ள முஸ்லிம்கள் யார் இறந்தாலும் , இவர் அனுப்பும் வெள்ளை துணியை போர்த்தித்தான் அடக்கம் செய்கிறார்கள்.

இந்த உறவு தொடரும் நிலையில் , இன்று தண்டபாணியின் மகன் சரவணனுக்கு திருமணம் நடைப்பெற்றது. பக்கத்து நகரமான திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற திருமணத்தில் கட்டிமேடு - ஆதிரெங்கத்தை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டு திருமணமாக கருதி திரண்டு வந்து வாழ்த்தியதோடு கல்யாண வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தனர்.
மாமா, மச்சான். அண்ணன், அண்ணி என்ற உறவு விசாரிப்புகள் மணமன்றத்தை விழாக் கோலமாக்கியது. இந்த திருமணத்திற்கு நானும் நேரில் வந்து வாழ்த்தினேன். பிரிவினை, மோதல் என வரும் செய்திகளுக்கு மத்தியில் இது போன்ற நிகழ்வுக்ள் மனதை குளிர வைக்கின்றன.''












Click it and Unblock the Notifications