மன்மதன் கோயிலை இடித்த நகராட்சி.. இந்து முன்னணி போராட்டம்!
தஞ்சாவூர்: மன்மதன் கோயிலை இடித்த நகராட்சி ஊழியர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் பெரும் தகராறு வெடித்தது.
திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேஷ். இவருடைய வீட்டின் அருகே மன்மதனுக்காக கோவில் இருந்தது. இந்த கோவில் தனக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் வெங்கடேஷ் கூறிவந்துள்ளார். கோயிலை அகற்றுவது நல்லதல்ல என்று அக்கோயில் நிர்வாகிகள் கூறிவந்துள்ளனர்.

இதனால் வெங்கடேஷ், கோவிலை அகற்ற வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஹைகோர்ட் கோவிலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை முதலியார் தெருவில் இருந்த மன்மதன் கோவிலை திருவாரூர் நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். அப்போது கோவிலில் இருந்த சாமி சிலைகளையும் எடுத்து சென்றனர்.
கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும், முதலியார் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்படி கோவில் அகற்றப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்த எதிர்ப்பை கோர்ட்டில் தெரிவிக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தினர்.
இதைதொடர்ந்து இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள், இந்து முன்னணி அமைப்பினருடன் இணைந்து இரும்பு தகடுகளை கொண்டு கூடாரம் அமைத்தனர். இந்த கூடாரத்தை உடனே அப்புறப்படுத்திய போலீசார், இதுதொடர்பாக 35 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய தாகவும் திருவாரூர் நகரசபை ஆணையர் தர்மலிங்கம் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணை தலைவர் காளமேகம், பா.ஜ.க ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அரசன், நகர செயலாளர் பிரமோத், நிர்வாகிகள் கணேசன், தேவகுமார் உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications