செம்பரம்பாக்கம் ஏரியில் 18 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - அடையாற்றில் வெள்ளம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 நாளாக மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்துவரும் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் மழைநீர் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

உபரி நீர் வெளியேற்றம்
செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்றுமுதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 500 கன அடியாக வெளியேற்றப்பட்ட நீர், படிப்படியாக உயர்த்தப்பட்டது.தற்போது ஏரியில் 7 மதகுகள் திறக்கப்பட்டு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மக்கள் வெளியேற்றம்
மழைநீர் அணைக்கு 13 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரைவிட கூடுதலாக 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரியில் இருந்து செல்லும் பாதையில் உள்ள சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்துவரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடையாற்றில் வெள்ளம்
அடையாறு ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடிவதால் குடிசைப்பகுதிகள் மட்டுமல்லாது அதை ஒட்டிய வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஆகிய இடங்களில் அடையாறு ஆற்றில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள வீடுகளைக் கூட பொதுமக்கள் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

குடிசைகள் மூழ்கின
சைதாப்பேட்டை பகுதிகளில் ஆற்றின் கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான குடிசைகள் மூழ்கின. அந்த குடிசைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனைப் பார்த்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கோட்டூர்புரத்தில் வெள்ளம்
அபாய அளவைத்தாண்டி வெள்ளம் செல்வதால் பாலத்தில் நின்று யாரும் தண்ணீரை வேடிக்கைப் பார்க்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோட்டூபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் அரசியல் கட்சியனர் யாரும் இதுவரை வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

15 ஆண்டுகளில் வெள்ளம்
கடந்த 15 வருடங்களில் இப்போதுதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியையொட்டியுள்ள திருமுடிவாக்கம், வரதராஜபுரம், பழந்தண்டலம், பூந்தண்டலம், குன்றத்தூரின் சில பகுதி மற்றும் சிறுகளத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் ஏரி தண்ணீர் புகுந்துள்ளது.

வெள்ளத்தில் தவிப்பு
சிறுகளத்தூர், திருமுடிவாக்கம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் செல்லும்பாதையில் உள்ள சிறுகளத்தூர் தரைப்பாலம், குன்றத்தூர், அனகாபுத்தூர் தரைப்பாலம், குன்றத்தூர், சோமங்கலம், குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications