இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. நத்தம் டோல்கேட் கட்டணத்தால் மதுரை மக்கள் ஆவேசம்
மதுரை: தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் அமைந்துள்ள மதுரை-நத்தம் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் வசூல் மையம் நேற்று திறக்கப்படவில்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலை மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 63 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது.இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பாலத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி அண்மையில் காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த சாலையில் உள்ள மேம்பாலம் தான் தமிழகத்திலேயே மிக நீளமான பாலம் ஆகும்.
மதுரையில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், திருச்சிக்கும், சென்னைக்கும் இந்த சாலை வழியாக விரைவாக செல்ல முடிகிறது. ஒத்தகடை வந்து அங்கிருந்து மேலூர் பைப்பாஸ் பிடித்து போவதை விட நத்தம் பைப்பாஸ் சாலை வழியாக துவரங்குறிச்சியை அடைந்து பொதுமக்களால் மிக வேகமாக திருச்சி போக முடிகிறது.
மதுரையில் இருந்து மாட்டுத்தாவணி வழியாக மேலூர் பைப்பாஸை பிடித்து சென்றால் 136 கிமீ துரத்திற்கு மேல் வரும். அதுவும் போக்குவரத்து நெரிசலும் அதிகம். அதேநேரம் மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் வழியாக சென்றால் 126 கிமீ தூரம் தான் திருச்சிக்கு.. மேலும் போக்குவரத்து நெரிசலும் இருக்காது. புதிய சாலை காரணமாக மதுரையின் மையப்பகுதியில் இருந்தே திருச்சிக்கு வெகு விரைவாக இப்போது போக முடிகிறது.

இந்நிலையில் மதுரை நத்தம் நான்குவழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வேம்பாரளி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அண்மையில் அறிவித்தது.
அதன்படி, ஒரு முறை செல்லும் கார்களுக்கு ரூ.180, 24 மணி நேரத்திற்குள் டோல்கேட் வழியாக திரும்பி வந்தால் ரூ.270 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ்களுக்கு ரூ.290, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.435 ஆகும். பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ.605, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.905 ஆகும்.
3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.660, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.990, பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.950 , 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.1,425 கட்டணம் ஆகும்.
அதிக அளவு அதாவது7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு முறை செல்வதற்கு ரூ.1,155, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வருவதற்கு ரூ.1,730 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக உபயோகம் அல்லது உள்ளூர் வாகனங்களுக்கு (20 கி.மீ., தொலைவிற்குள்) மாதாந்திர பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இந்த கட்டணம் இன்று 27ம் தேதி காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது.
ஆனால் திட்டமிட்டப்படி நேற்று சுங்கச்சாவடி திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சுங்கச்சாவடி திறக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில் சுங்க கட்டணம் மிக அதிகம் என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலித்தால், மக்கள் இந்த பகுதியில் மாற்றுப்பாதைகளில் பயணித்துவிடுவார்கள் என்றும், அதனால் நத்தம் பறக்கும் பாலமும், நான்குவழிச்சாலையும் பயணில்லாமல் போகும் என்றும் புகார் எழுந்துள்ளது.
இதனிடையே மதுரை ஊமச்சிக்குளம் சத்திரப்பட்டி இடையே சாலை பழைய நிலையிலேயே உள்ளது. அப்பகுதியில் மட்டும் முழுமையாக புதிய சாலை போடவில்லை அந்த பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுங்கச்சாவடி திறக்கப்படாததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் டோல்கேட்டை கடந்து சென்றனர். சுங்கச்சாவடி திறக்கப்படாததற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications