சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே பல தரப்பின் கோரிக்கையாகவும் உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு என்றால் மின்னணு அல்லது வாக்குப் பெட்டி பயன்படுத்தப்படும்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபித்தாக வேண்டும். இந்த அக்னி பரிட்சை நடைபெறுவது எப்படி தெரியுமா?
இன்று சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.
அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு
இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார்.
தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என மூன்று பிரிவுகளாக வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்துவார். முன்னதாக இந்த தீர்மானத்தில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற அரசுக் கொறடாவின் உத்தரவு வாசிக்கப்படும்.
தலையை எண்ணுவார்கள்
பின்னர் சட்டசபையின் 6 பகுதிகளிலும் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களை தனித்தனியாக எண்ணும் பணி நடைபெறும். சட்டசபை ஊழியர் இவ்வாறு எம்.எல்.ஏக்களை எண்ணுவார். தீர்மானத்தை ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர்களை சட்டசபை செயலாளர் குறித்து வைத்துக்கொண்டு அதைப் படிப்பார்.
மூன்று பிரிவாக எண்ணிக்கை
பின்னர் எதிர்ப்போர், நடுநிலை வகிப்போரின் பெயர்கள் எழுதப்படும். 6 பிளாக்களிலும் ஓட்டெடுப்பு முடிந்தபிறகு, ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முதல்வரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்படும்.
ரகசிய வாக்கெடுப்பு
இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு ஓட்டு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக ஓட்டளிக்க முடியும். இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்தாமல் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே பல தரப்பின் கோரிக்கையாகவும் உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு என்றால் மின்னணு அல்லது வாக்குப் பெட்டி பயன்படுத்தப்படும். ஆனால் இப்படி செய்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக யார், யார் வாக்களிப்பார்கள் என்பது தெரியாது என்பதால் அதை அரசு தரப்பு விரும்பாது என்றே தெரிகிறது.